Tuesday, August 10, 2010

ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான ரமலான்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான வரக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்ற நன்னோக்கில் இவ்விழை துவக்கப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.

"யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’

என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்து நபி (ஸல்) அவர்களும் 'ஆமீன்' என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதத்தின் சிறப்பையும் இந்த மாதம் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)


ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)


லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)

இப்படிப்பட்ட புனித ரமலான் மாதத்தில் நாம் அரும்பாடுபட்டு செய்கின்ற நன்மைகளும், பாவமன்னிப்புக் கேட்டு செய்கின்ற பிரார்த்தனைகளும் முறையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் நமது நம்பிக்கை சார்ந்த இஸ்லாத்தின் அடிப்படைகளை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் இஸ்லாத்தின் அடிப்படையான "ஏகத்துவம் என்றால் என்ன? என்பதைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக 'வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது என்றால் என்ன?' என்பதைப் பற்றி இனி பார்ப்போம்.

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது!

"தவ்ஹீதுல் உலூஹிய்யா" என்று அழைக்கப்படுகின்ற இவ்வகை தவ்ஹீதைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக அதிகம் இருக்கிறது. முதல் வகை தவ்ஹீதான 'படைத்துப் பரிபாலித்தலில் இறைவனை ஒருமைப்படுத்துல்' என்பதைச் சரியாக புரிந்துக் கொண்ட முஸ்லிம்களில் பலர் இந்த வகைத் தவ்ஹீதையும் அடுத்து வரக்கூடியதையும் சரியாகப் புரிந்துக் கொள்ளாத காரணத்தினாலேயே இன்று இஸ்லாமிய சமூகத்திலே ஷிர்க், சமாதி வழிபாடுகள் போன்றவை மலிந்து காணப்படுகின்றன.

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.

கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.

தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக சென்றபோது,சொல்லொனா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிறுவர்களை ஏவி கல்லால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, தாயிஃபை அடுத்து ஒரு தோட்டத்திலே, உடல் எல்லாம் இரத்தம் வழிந்தேட அம்ர்ந்திருக்கும்போது, இறைவனின் கட்டளையின் பேரில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி, மிகப்பெரிய இரண்டு மலைகளையும் ஒன்றாக இணைத்து, இந்த மக்களை அதிலே நசுக்கிவிடவா என்று கேட்டார்கள். அப்போதுகூட மாநபி அவர்கள், வேண்டாம் இவர்கள் இல்லை என்றாலும் இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக்

கூடியவர்களாக் வருவார்கள் என்று சொல்லி, தாயிஃப் நகர மக்களின் மீது கருனையை பொழிந்தார்கள்.

பத்ருப்போரில் பிடிபட்ட போர்க்கைதிகளை, உயிரோடு விடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உட்பட சொன்னபோது, (உமர் ரலி) அவர்களின் கருத்துக்கு ஏற்ப பிறகு குர் ஆன் வசனம் இறங்கியது) ஒவ்வொரு கைதியும் பத்து சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்கள்.

மக்கத்து வெற்றியின்போது, தன்னை இந்த மண்ணில் இருந்து விரட்டியடித்தவர்களை, இன்று உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை, அபூ ஸுஃப்யானின் வீட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும் பாதுகாப்பு என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்களே தவிர அவர்களை சபிக்கவில்லை.

இப்படியாக இந்த உம்மத்தினர்மீது கருணையை பொழிந்த நபி (ஸல்) அவர்கள்,ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சிலரை சபித்துள்ளார்கள். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் தான் ரமழானை அடைந்து பாவ மன்னிப்பு பெறாதவர். ரமழான் மாதம் பாவ மன்னிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை கீழ்கண்ட ஹதீஸின் மூலம அறிந்து கொள்ள முடிகிறது.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.

1.யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

2.பின்னர், ‘யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

3.‘உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்’ என்றார். அதற்கும் ‘ஆமீன்’ என்றேன். நூல்கள்: திர்மிதீ: 3545, அஹ்மத்: 7444, இப்னு குஸைமா 1888, இப்னு ஹிப்பான்: 908

ஆகையால், இறைவன் நம் அனைவரையும் சபிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்காமல், பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்கி அருள வேண்டும். அதற்காக வரக்கூடிய புனித மிக்க ரமழான் மாதத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.